கல்முனையில் ஹெரோயினுடன் கைதானவர்கள் தடுத்து வைத்து விசாரணை

 கல்முனையில் ஹெரோயினுடன்  கைதானவர்கள் தடுத்து வைத்து விசாரணை

கல்முனை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களை எதிர்வரும் 3ஆம் திகதி புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அருகில் வாடகை வீடொன்றில் குறித்த குழுவினை சேர்ந்த 8 பேர்   கடந்த வியாழக்கிழமை (27) மாலை   கல்முனை விசேட பிரிவிற்கு   நீண்ட காலமாக  போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக  கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்ட நிலையில் கைதாகினர்.

இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையினை கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்தவின் மேற்பார்வை செய்ததுடன்  போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் வை. அருணன், பொலிஸ் கொஸ்தாபல்களான   அருண ( 75278 ), செலர்( 40313 ), நிமால்  (81988) மற்றும் சிவில் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்  றிஹால்  (6045) ஆகியோர் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.
 
இதன்போது  கைத்தொலைபேசி - 14,  இரகசியக் கமரா -1, ஹெரோயின்,  ஐஸ் போதைப்பொருள் மாத்திரைகள் அடங்கிய  பொதிகள், பொலிஸாரை மந்திரத்தினால் வசியப்படுத்தும் விபரங்கள் அடங்கிய தாள்கள், வங்கி சிட்டைகள், வங்கி அட்டைகள், குர்ஆன் பிரதிகள், கணனி விசைப்பலகை, வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான உலகப் படத் தொகுதி, கொடுக்கல் வாங்கல் மேற்கொண்ட வங்கி  காசோலைகள், கடிதங்கள், இலங்கை புகழ் பெற்ற அரசியல்வாதிகளின் பத்திரிகைகளில் வெளிவந்த புகைப்படங்கள், சார்ஜ்சர்கள், சீசா என்றழைக்கப்படும் போதைப்பொருளை நுகர பயன்படுத்தும் உபகரணம், லப்டெப் - 2 கணனி ,வன்பொருள் - 1 என்பன மீட்கப்பட்டதுடன்  சுமார் 27 முதல் 40 வயது மதிக்கத்தக்க திருமணமாகாத  8 சந்தேக நபர்கள்  கைதாகினர்.

இதில் கைதான  ஒருவர் பல்வேறு குற்றச்செயல்களுக்காக நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கைதாகிய 8 பேரையும்  கல்முனை நீதிவான்  நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன் இவ்வாறான போதைப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் மற்றும் அவற்றை வாங்கி உபயோகிப்பவர்கள் சம்பந்தமாக தகவல் ஏதும் கிடைக்கப் பெற்றால் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கும் அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர்.