பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சு

பாடசாலைகள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக பயன்படுத்தப்படவில்லை: பாதுகாப்பு அமைச்சு

முப்படையினரின் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக  பாடசாலைகளில் தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைப்பதற்கு எந்தவித உத்தரவும் வழங்கப்படவில்லை என பாதுகாப்பு அமைச்சு இன்று (29) புதன்கிழமை அறிவித்தது.

அத்துடன் தனிமைப்படுத்தல் நிலையங்களாக அரச பாடசாலைகiளை இராணுவத்தினர் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான செய்திகளை பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நிராகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலுள்ள பாடசாலைகள் இராணுவத்தினரின் தனிமைப்படுத்தல் செயற்பாட்டிற்காக பொறுப்பேற்கப்பட்டுள்ளது என சில இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் செய்திகள் பரப்பப்பட்டன.

அத்துடன் கிழக்கு மாகாணத்தில் 11 பாடசாலைகள் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூரினை மேற்கொள்காட்டி சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கமைய கல்முனைப் பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும், திருமலை பிராந்தியத்தில் 04 பாடசாலைகளும் அம்பாறைப் பிராந்தியத்தில் 03 பாடசாலைகளும் இராணுவத்தால் பொறுப்பேற்கப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களாகின்றன என குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்தச் செய்திகளை பாதுகாப்பு செயலாளர் மறுத்துள்ளதுடன்  தனிமைப்படுத்தல் நிலையங்களாக எந்தவொரு பாடசாலையினையும் இராணுவத்தினர் பயன்படுத்தவில்லை என்றார்.

எனினும் மேலதிக முகாம்களாகவே பாடசாலைகளை பயன்டுத்தப்படுகின்றன என அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் விசேட ஊடக அறிக்கையொன்றினையும் இன்று வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விடுமுறைகள் மற்றும் குறுகிய கால விடுமுறைகள் அனைத்தும் உடனடியாக இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அனைவரும் உடனடியாக சேவைக்கு திரும்பும் வகையில் தத்தமது முகாம்களுக்கு வருமாறு எம்மால் வழங்கப்பட்ட ஆலோசனைகளை அடுத்து  ஒரே நேரத்தில்  பெருமளவிலான படை வீரர்கள் வருகை தந்திருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் பிரதான செயற்பாடானது சமூக இடைவெளியை பேணுவதாகும். அவ்வாறு சமூக இடைவெளியை பேணுவம் வகையில் இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்கள் தங்கும் முகாம்களில் போதியளவு வசதிகள் காணப்படாததை அடுத்தே கல்வி அமைச்சின் அனுமதியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடசாலைகளில் சுகாதார மற்றும் சமூக இடைவெளிகளைக் கொண்ட தங்குமிட வசதிகளை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சினால் முப்படை தளபதிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

சுகாதார அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் தற்போது 54 இராணுவ தனிமைப்படுத்தும் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இதில் இன்றுவரை சுமார் 3, 292 பேர் தனிமைப்படுத்தும் நிலையங்களில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக  தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை 4,526 பேர் தங்களது இறுதி சுகாதார பரிசோதனைகளை நிறைவு செய்துக் கொண்டு தனிமைப்படுத்தலுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு தனிமைப்படுத்தும் நிலையத்திலிருந்து தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.  

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என சந்தேகிக்கப்படும் முப்படை வீரர்கள் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் பாடசாலைகளில் தங்ககுமிட வசதிகள் வழங்கப்பட்டுள்ளவர்கள்   தனிமைப்படுத்தும் நிலையங்களில் உள்ளவர்கள் அணிந்துள்ள பாதுகாப்பு கவசங்கள் போல் அல்லாது முகக் கவசங்கள் மாத்திரமே அணிந்திருப்பதாகவும் தெரிவித்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, அடிப்படையற்ற அறிக்கைகளை வெளியிடுவது நெறிமுறையானதல்ல எனவும், இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் இதுபோன்ற தவறான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் எனவும் அவர் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.