கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப 178 பில்லின் ரூபா கடனுதவி

கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களை கட்டியெழுப்ப 178 பில்லின் ரூபா கடனுதவி

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற 61,907 கடன் விண்ணப்பங்களுக்கு 177,954 மில்லியன் ரூபாவினை வழங்குவதற்கு இலஙகை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இந்த விண்ணப்பங்கள் சௌபாக்யா கொவிட்-19 புத்துயிரளித்தல் வசதியின் மூன்று கட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இது வரையில், உரிமம்பெற்ற வங்கிகள் நாடுமுழுவதும் பாதிக்கப்பட்ட 45,582 வியாபாரங்களுக்கிடையில் 133,192 மில்லியன் ரூபா கடன்களை விடுவித்துள்ளது.

இந்த கடன் திட்டத்தின் முதற் கட்டம் 2020 ஏப்ரல் 01ஆம் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த கடன் திட்டத்தின் கட்டம் - II மற்றும் கட்டம் - III ஆகிய இரண்டும் 2020 ஜுலை 01இல் இருந்து அமுலுக்குவரும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது,

இந்த திட்டங்களின் நோக்கமானது ஆண்டிற்கு 4 சதவீத வட்டி வீதத்தில் மொத்தமாக 150 பில்லியன் ரூபாவினை தொழிற்படு மூலதனக் கடன்களாக வழங்குவதாகும். இந்த கடன்கள் 6 மாத சலுகைக் காலம் உள்ளடங்கலாக 24 மாதங்கள் மீளச் செலுத்தும் காலத்தினை கொண்டது.

கொவிட்-19 பரவலினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட சுயதொழில் மற்றும் தனிநபர்கள் உள்ளடங்கலான வியாபாரங்கள் இதன் பயன்பெறுநர்களாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாதிக்கப்பட்ட வியாபாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற அதிக எண்ணிக்கையிலான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, இலங்கை மத்திய வங்கியானது முன்னதாக எதிர்பார்க்கப்பட்ட 150 பில்லியன் ரூபா வரையறையினைக் கருத்திற்கொள்ளாது விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்தது.

அறிவிக்கப்பட்ட முடிவுத் திகதி வரையில் கிடைக்கப்பெற்ற பாதிக்கப்பட்ட வியாபாரங்களின் அனைத்து விண்ணப்பங்களும் இந்தக் கடன் திட்டத்தினூடாக சேவையாற்றப்படுகின்றமை முக்கிய விடயமாகும்.